Showing posts with label ஒளி. Show all posts
Showing posts with label ஒளி. Show all posts

Sunday, December 5, 2010

பள்ளத்தாக்கின் எதிரொலிகள்

நான் பகல்களையே பார்த்துப் பழகி,
பகலிலே உறவாடி,
நிழல்கள் நீளும்வரையே
நிகழ்வுகளைச் சுருக்கியவன்.
இமைமூடிய நிலையிலும் கண்கள்
வெளிச்சத்தை வேண்டியவாறு,
நிலைத்துநின்ற(து) காலம்.

கிரகணத்து இடைவெளியில்,
கையளவு நீரள்ளி,
என் வெண்தாமரை முகம்பார்க்கின்,
அது யாதெனத்தான் தெரியுமோ?
கரைபடிந்த கைகளென,
உள்ளம்தான் குழம்புமோ?

நான் நிழற்கோடுகளின் காதலன்.
மோகன இரவுகளின்,
மென்காற்றில் நடையிட்டு,
வந்துபோகும் நிழல்களுடன்,
பெருங்கதைகள் பேசியதுண்டு.

இமைமூட மறந்த ஒரு நாள்,
நிலவுதான் மறைந்ததோ?
மஞ்சள் முலாம் பூசி
வேடமிட்டதோ?
தெரிந்த நிழல்களைத்
தொட்டாலும் தகிக்கின்றனவே?

நான் பெருவெளியின் காதலன்.
அந்தியும் விடிவெள்ளியும்,
தூரலும் பெருமழையும்,
அமைதியும் பேரிடிகளும்,
என்னை ஆறத்தழுவிக்கொள்வன.
முகபாவனைகளும் நிழலசைவுகளும்,
இணைந்தாடும் பொம்மலாட்டத்தை,
என் தோழர்களின் எதிரொலிகள்,
இசை கோர்த்து முடித்தன.

Saturday, August 7, 2010

சூனியத்தில் ஞானோதயம்

மெல்ல மெல்ல ஓடியவன்,
மலைமுகடுகளுக்குள் ஒளிந்தபடி மேலெழும்பி,
மேகங்களுள் மறைந்திருந்தான்..
அடுக்கடுக்காகத் தாவிச்சென்று,
நகர்ந்துகொண்டிருந்த கதிரவனை
இருகரம் கொண்டு அள்ளி,
வைத்திருந்த மண்சட்டிக்குள் போட்டுமூடி
சூனியத்தில் தொலைந்து போனான்..

ஆன்மாக்கள் சிலவற்றை சொஸ்தப்படுத்த
வருடங்கள் ஆகுமென்றும்,
காலத்தை நிறுத்தினாலொழிய நடக்காதென்றும்
குரு  அருளியதால்,
ஞாயிறு மறைந்தால் நலமென்று
எண்ணினான் போலும்..














காயத்ரி மந்திரங்களும்,
தொழுகைகளும்
சற்று பொறுத்திருக்கலாம்..
பரமாத்மாக்களின் பின்மண்டை வட்டங்கள்
சிலகாலம் சுழலாமல் ஓய்வெடுக்கலாம்..

இருளில்,
சொஸ்தப்பட்ட ஆன்மாக்கள்
பரமாத்மாவாகும் தருணம்,
மண்சட்டி உடைந்து
பட்டொளி வீசும்..

சூனியத்தில்,
தொலைந்தவன்,
மறுபிறவியில் சொஸ்தப்படுத்தலாம்..