Showing posts with label மயிலிறகு. Show all posts
Showing posts with label மயிலிறகு. Show all posts

Thursday, July 22, 2010

ஊர்சுற்றி

என் கைரேகை படிகிறதோ இல்லையோ,
தூசி படிவதை அனுமதித்ததில்லை..
பகுத்து வைப்பதில் காட்டும் ஆர்வம்,
நூட்களைப் படித்து முடிப்பதில் இருந்ததில்லை..

தொடர்ந்த சில நாட்களாய்,
அடுக்கியவை மாறியிருப்பதும்,
களைந்து கிடப்பதும் கண்டு துணுக்குற்றேன்..
பழையபடி அடுக்கிவைத்துவிட்டு,
யாருடைய வேலையாயிருக்கும் என வேவு பார்த்தேன்..



















ஐந்து வயது மகள்தான்
அடிக்கடி இங்கு வருகிறாள்..
வாய்ப்பாட்டு நூட்கள் என்னிடமில்லையே?
ஒருநாள் கையுங்களவுமாய்ப் பிடித்துவிட்டேன்..

ஒளித்து வைத்த மயிலிறகு,
ஒரே வீடும் ஊரும் அலுப்பூட்டுவதாவும்,
ஊர்சுற்றிப் பார்க்க இறைஞ்சியதாயும் சொன்னதாம்..
இனி நான் சுற்றிக்காட்டுவதாய்
உறுதியளித்தபின் தான் அமைதியுற்றாள்..
இதற்காகவேணும் சிலவற்றைப் புரட்டியாகவேண்டும்..


Pic: http://www.hardwaresphere.com/