Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Monday, March 7, 2011

கயல்

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைதான் உனக்கு..

ஓரளவுக்குப் பழகியும் இருந்தாய்..
எதிர்வரும் அலைகளை எம்பித்தாவி,
வெதும்பும் படுகையினின்று உள்ளிறங்கி,
பவழப்பாறைகளை முத்தமிட்டாய்..
அனைத்துக்கும் தோழிமாருடனே..

தூரத்துக் கதிரவன்மேல் மையல் கொண்டாய்..
தொட்டுவிட எத்தனித்து இரந்துநின்றாய்..
தோழிமார் இல்லையடி,
உன் துடுப்புகளுடன் துணைநிற்க..

உன் பெரிய வலப்பக்கத் துடுப்பிலே,
நார் ஒன்று பற்றி இழுத்தது..
பலகாலம் சுற்றித்திரிந்து,
உப்பங்கழியில் ஓய்வெடுக்கும்,
உன் தாயிடத்தில் முடிந்ததது..

உப்பங்கழியில் உறைந்திடுவாய் சிலநாளே..
தாய் பற்றிய நாரின்
மறுமுனையைப் பற்றி,
உன் கயல்விழியில் கரைந்து,
துள்ளிக்குதித்துச் சுற்றுலா செல்லக்
கூடிவரும் உறவு..

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைகொள் தோழி..

Wednesday, February 23, 2011

ஆறாம் திணை - மூளையும், மூளை சார்ந்த இடமும்

கருவறை தந்த வெப்பம்
வெளிவந்ததும் அணைந்தது..
தவழ்ந்து உருண்டு விழுந்ததெல்லாம்
வடுவாகிப்போய் பின் மறைந்தது..

நாடோடி வாழ்க்கையில்லை..
பிறையும் கதிரும் தேவையில்லை..
வெடிச்சிரிப்பைக் கேட்டதன்றி
புன்னகையைப் பார்ப்பதில்லை..
மேட்டிமைத்தனம் காட்டவன்றோ
ரணமாக்கி வைத்தததுவும்
விசும்பிடவும் நினைப்பதில்லை..

நடந்தோடிப் பிழைக்கும் பொருட்டு
முடிந்தவரை எனை மறைத்தேன்..
விழுவதையும் மறந்துவிட்டேன்..
காற்றும் புகாத காலணி கொண்டு
புட்டிப்பால் அளவிலே பூமியின் உறவு..

ஓடுவதை நிறுத்தி நடக்க முற்பட்டேன்..
முதிர்ச்சியின் அளவுகோலாம்,
களத்தின் விளிம்பையடுத்து தள்ளப்பட்டேன்..
செம்மண்ணின் தூசியேறிச்
சிவந்திருந்தன கண்கள்..

நடப்பதையும் நிறுத்திக்
காலணியைத் தூர எரிந்து,
மண்ணுக்குக் காலைக் கொடுத்தேன்..
பாலூட்டிய மெய்யின் கதகதப்பு,
ஊனேறிக் குளிர்ந்தக்கால்,
விழிவழி பால் சுரந்தது..

Wednesday, June 23, 2010

"அதே கரையில், உன்னுடன் கரைகையில்.."

உறவாடிச் சென்ற பறவையொன்றைப்
பிரதியெடுத்துக் காத்திருக்கும்..

ஊழிக்காற்றின் பேரலைகள்,
உனைத் தொடத் துடித்திருக்கும்..













இருந்தும், கடந்த வருடம் பதிந்த தடம்,
அழியாமல் வைத்திருக்கும்..

பிஞ்சுக் கால்களை எதிர்பாராமல்,
மலர்களைக் கொணர மறந்திருக்கும்..

சாரல் நனைத்த உடல் முழுதும்
உலர்ந்து போகலாம்..
ஒன்றிணைந்த நம்முள்ளம் என்றும்
நனைந்தேயிருக்கும்..

Friday, December 25, 2009

வெடித்துச் சிரிக்கும் பருத்தி..

விழிகள் சிரிக்கப் பழகின..
உதவிக்காய் ஆரம்பித்து,
தினம் உதை வாங்கி விழி திறந்தேன்,
சிரித்துக்கொண்டே தான்..

சிலாகிப்புகளும் கருத்து மோதல்களும் காற்றளவில்தான்..
இருத்திய நம்பிக்கைகள், ரேகைகளையும் அழித்தன..
நா உலர்ந்தும் போயிருக்கின்றது..
நாளடைவில், கண்ணசைவுகளே போதுமென்றானது..

மொழிதலின் பயனற்றுப் போனதாய்ச் சில
நாட்கள்,
மாதங்கள்..
உலர்ந்த சேலை கம்பியினின்று பறப்பதாய் உணர்ந்தேன்..
உறவுகளுக்குள் விடுதலையென்பது மரணித்தால் மட்டுமே..

மேகங்கள் சற்றே கூடுவதாய்த் தெரிந்தது..
நலவிசாரிப்புகள் செல்லச் சாபங்களில் தொடர்ந்தது..
பீரிட்ட கண்ணீர்,
சேலையைக் கம்பியுடன் இணைத்துச் சென்றது..