Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts

Tuesday, August 10, 2010

தலைமுறைகளின் ஈரம்

வண்டியில் ஏறியவுடன் ஈர்த்தது,
முன்னே சென்ற கொலுசுகள்.
அவை ஓர் இருக்கையில் நின்றுவிட,
நாகரிகம் கருதி உள்ளே சென்றேன்.

நான்காவது வரிசையில்
சன்னலோரம்
ஒடுங்கியிருந்த கிழவியின்
கம்மிய விம்மல்.
கடந்து சென்றபோது,
உள்வந்த காற்று,
அவளின் ஈரத்துடன்,
சில்லிற்று.

இங்கிருந்து சரியாக ஐந்தாவது நிறுத்தம்.

மொத்தமே நான்கு பேர்தான் இருந்தோம்.
கடைசிக்கும் முந்திய வரிசையில் கிடத்தினேன்.
கம்பியை இறுகப்பிடித்திருந்தன விரல்கள்.
கைமுட்டியும் தசைகளும்,
ஏனோ
தளர்ந்து, பிடிமானம் ஒன்றைத் தேடின.
எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

நான்காவது நிறுத்தம்.

காற்றின் இரைச்சல்.
அழகிகளின் புன்சிரிப்புகள்.
ஓட்டுபவரின் அங்கலாய்ப்பு.
வண்டியில் என்னிருப்பை உணர்த்தின.

இரண்டு நிறுத்தங்கள்.

ஒன்றுவிட்ட தம்பி,
மகள்வயிற்றுப் பேத்தி,
யாராகிலும்.
பிறந்த வளர்ந்த கிராமத்தின்
எல்லைச்சாமி கடந்திருக்கலாம்.

அவளின் முனகல்,
பாட்டஞ்சென்ற போது,
ஓரத்தில் கிடத்தியிருந்த
செல்லமாயியின் கேவலை முன்னிறுத்தியது.

இருப்புக்கொள்ளாமல்,
முதல் நிறுத்தத்தில் இறங்கி,
நடக்கத் துவங்கினேன்.

பயணச்சீட்டைக் கிழித்து தூரப்போட்டு,
பஞ்சாயத்துக் கொட்டாயின் பாட்டுக்குக்
காதைக் கொடுத்தேன்.
பாடகனின் குரல்,
நைந்துபோயிருந்தது.