Wednesday, May 26, 2010

மனிதனாகிப் போனேன்..

தாத்தனின் கடிகார ஊஞ்சல்,
மெல்ல தூங்கச் சென்றவனைத்
தட்டி எழுப்பியது..

ஒவ்வொரு அடியாய்,
வேகமாய் எடுத்துவைத்து,
பறக்க எத்தனிக்கும் உணர்வும்,
படையெடுப்பைப் போல்,
அடுத்த முறை பறந்திடலாம்,
என்ற நப்பாசையும் என்றுமுண்டு..

ஐம்பது ரூபாய் கொடுத்து,
பொருட்காட்சி ஊஞ்சலில் அமர்வது,
அயர்ச்சியூட்டக் கூடியது..
கல்லைத் தூக்கியெறியும் உணர்வு..
என்வீட்டு ஊஞ்சலின் தன்மையே,
நான் பறக்கிறேன்,
நானாகவே பறக்கிறேன் என்பதால்..

பள்ளிப்பருவ மழைக்காலங்களில்,
தெருமுழுதும் நீர்நிற்க,
ஊரையே காப்பாற்ற வந்த பெருங்கப்பலாக,
என் ஊஞ்சலை முன்னிறுத்தி,
நண்பர்களிடம் பெருமையடித்ததுண்டு..
நாற்காலி, படுக்கை என்று எல்லாமே
ஊஞ்சலாகிப் போன நாட்களுண்டு..

பின்னொரு சித்திரையில்,
அப்பாவுக்கு மாற்றலாகி வந்ததால்,
விலைக்குக் கொடுத்துவிட்டார்..
பெருங்கப்பலாய், விமானமாய் இன்னும்
என்னவெல்லாகவோ இருந்ததால்தான்
இடம்போதவில்லை என்றார்..

அவருக்குத் தெரிந்திருக்கவில்லை,
அவையெல்லாம் முறையே
என் உடம்பு, கை, கால்களாகிப் போனதென்று..
ஏதுமற்ற எதுவோவாகிப்போன,
உருவிப் போட்டதைப் போலிருந்தது..

என்றேனும் ஒருநாள்,
உங்கள் வீட்டுக் கதவருகே,
நின்றபடியே தூங்கிக் கொண்டிருப்பேன்..
என் ஊஞ்சலாய் இருக்குமோ
என்ற நம்பிக்கையில்..
எழுப்பிடாதீர்கள், இன்றுபோல்..

பாலையில் வேட்டை.. (மையச் சிந்தனைகள் - 5)

புரியாத மொழி பலவுண்டு..
போடாத வேஷம் பலவுண்டு..
உணராத சுவை பலவுண்டு..
உணர்ந்தும் உணரவொண்ணா, நிற்கமாட்டாத இடம் பலவுண்டு..

உள்ளூர அரித்துக்கொல்லும்
எதிர்மறைகள் குவிந்து ஈட்டி எரிய,
பறவையின் நிழலைத் தொடரும் குழந்தையைப் பாவித்து,
இல்லாத பறவையையும்,
இருளில் மறைந்திடும் நிழலையும்,
உணராமலே,
ஓடித்திரிகிறேன்..

Friday, May 21, 2010

அகத்தின் அழகு..

பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..

ஊர் எல்லையின் விளக்கு கண்சிமிட்டியபடி,
வழிப்போக்கரின் கண்களை மழுங்கடித்தது..

இணைதேடும் தவளைகளும்,
இலக்குகளைத் தேடும் ஆந்தைகளும்,
இருப்பை உணர்த்தும் மின்மினிக்களும்,
ஒன்றையொன்று கவனியாதே இருந்தன..

சற்றே ஈரமடைந்த
பூமியின் இரேகைகளாகக்
கிடந்த தெருக்களில்,
பதிந்த தடங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தேன்..

கூரிய நகங்கள், பூனையாக இருக்கக்கூடும்..
நரியாகவும் இருக்கலாம்..
இருப்பினும், இரத்தக்கறை எதுவும் அருகாமையிலில்லை..

சிறிய பாதத்தோடு மெல்லிய பதிவு,
நாயாக இருக்கலாம்.. தூரத்தில் முனகல் சத்தம்..

மாட்டுக் குளம்புகளின் பதியங்கள்
அங்குமிங்குமாய் தென்பட,
வல்லூறுகளின் நகக்கோடுகளும்,
அவை இழுத்துப் பறந்து சென்ற,
உடலின் சிதைந்த ரேகைகளும்..

வீடு வந்து கதவடைக்கும்போது,
நான் நடந்து வந்ததை திரும்பப் பார்த்தேன்..
கழுதைப்புலி ஒன்றின் பதிவுதான் கண்பட்டது..

ஆம், பதுங்கியிருந்த பலவற்றை
வெளிக்கொணர்ந்திருந்தது, மழை..

Friday, May 14, 2010

பட்டம் விடுதல்

அறுந்து விழும் பட்டங்கள்,
சீதக்காதிகள் தான்..
எதிர்வீடு, அண்டை வீடென்று
பாரபட்சம் பார்க்காதவை..

அந்தியின் மஞ்சளைத்
திருடித் திரித்தாற்போன்ற சுடிதார்..
கதிரவன் கண்டுகொண்டானோ அன்று,
இவனது கொள்ளிக்கண்கள்,
குறுகுறுப்புடன் கூடிய குழப்பத்தினால்,
வெளிறிப் பார்த்தன..

சட்டெனக் காய்ந்திருக்க வேண்டும்..
கதிரவனுக்கு விடுப்பளித்து விட்டான்..
சென்றவன் பழிதீர்க்க,
மேகங்களை அனுப்பினான்..

மச்சிலிருந்து இறங்கியவன்,
எதிர்வீட்டுத் திண்ணையின் சிரிப்பொலியில்,
மழலையும் இருக்கக்கண்டான்..

நீர்காற்று கலந்து பெருத்து உருவாகும்,
குமிழியின் ஆயுளும் பெரிதாமோ?

நனைந்த தாடையில் கலந்து,
கரைந்து கொண்டிருந்தது,
நீர்தான்..

Tuesday, May 11, 2010

காரணி

பற்கள் வலுப்பெறும் வரை,
உன் இரத்தம்..
ஆசனவாய் அறிதலுக்குமுன்,
உன் முடிவே, வெளியிருத்தல்..
முட்டிகள் வலுப்பெறும் வரை,
உன் யாக்கை முழுதும்..
மூளை வலுப்பெறும் வரை,
உன் வார்த்தைகள், ஓசையாய்..

கிரகிக்கும் அத்தனையும்
மோதிப் பிணைந்து நிற்க,
மேலைக்காற்றின் புழுதியில்
உருண்டோடி வந்த குப்பைப்பந்தானதென் மூளை..
பிணக்குகள் பல்கிப்போன நரம்புகளின் முடிவுகளில்,
தூசி எறிந்துபட்டதென உணரும்போதெலாம்,
உன்னின்று வெட்டப்பட்ட நகமாவேன், மயிருமாவேன்..
வலுவிழந்து, உயிரிழந்து, மண்ணாவேன்..